இலங்கை சிறைகளில் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சந்தேகநபர்களை ரிமாண்ட் சிறை காவலில் வைக்காமல், வீட்டு கைது (House Arrest) விதிக்க அனுமதிக்கும் சட்ட மசோதாவை அரசு தயாரித்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுமார் 10,500 கைதிகளைத் தங்க வைக்க வடிவமைக்கப்பட்டுள்ள நாட்டின் சிறைகளில் தற்போது 39,000க்கு அருகிலானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,
தண்டனை வழங்கப்படாத ரிமாண்ட் கைதிகள் அதிக அளவில் இருப்பதே முக்கிய சிக்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் 20,000 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதியரசர் யசந்த கொடகொடாவின் வழிகாட்டுதலின் கீழ் தயாராகும் புதிய சட்ட முன்மொழிவு, பொருத்தமான வழக்குகளில் சந்தேகநபர்களை சிறையில் ரிமாண்ட் செய்யாமல், வீட்டு கைது விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் என்றும், இதன் மூலம் சிறை நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது எந்த முறையான அமைப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.