புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஓட்டுநரை கொலை செய்து வாகனத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடப்பனவில்லு பகுதியில் கால்வாயில் இருந்து 75 வயதுடைய அப்துல் லதீப் என்பவரின் உடல் நேற்று (22.02) காலை மீட்கப்பட்டது. அவர் கடந்த 21ம் திகதி இரவு பயணத்திற்காக தன் முச்சக்கரவண்டியுடன் சென்றபின் காணாமல் போயிருந்தார்.
வாகனத்தை பறிக்க முனைந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் ஓட்டுநரை தாக்கி கொலை செய்த பின்னர் முச்சக்கரவண்டியைக் கொண்டு தப்பிச் சென்றதாகவும், பின்னர் குறித்த வாகனம் கைவிடப்பட்டிருந்தநிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் போதைப்பொருள் பழக்கத்திற்காக பணம் தேவைப்பட்டதால் இந்தக் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.