போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ Paulo Rangel, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் கடந்த 24ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விசேட கவனம் செலுத்தினர். அத்துடன், பரஸ்பர நலன் சார்ந்த ஏனைய துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. காலநிலை மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட கல்வித்துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பிரதமர் இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள போர்த்துக்கல் தூதுவர் João Ribeiro de Almeida, போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சின் பிரதி அரசியல் பணிப்பாளர் கலாநிதி Alexandra Bilreiro, பணிக்குழாம் பிரதானி கலாநிதி Filipe Ramalho Ortigão ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதுக்குழு சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றதாக
பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.