ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் போதைப்பொருள் கடத்தலாளராகவும் அறியப்படும் அருமாஹண்டி ஜனித் மதுசங்க டி சில்வா எனப்படும் ‘பொடி லஸ்ஸி’, இன்று (27.02) அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், அவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்க்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் இன்டர்போல் அமைப்பின் தலையீட்டின் கீழ், இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ‘பொடி லஸ்ஸி’, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை நகரில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (27.02) அதிகாலை 05.55 மணிக்கு மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல்.-142 என்ற விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக ‘பொடி லஸ்ஸி’யை ஆல்பிட்டிய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடுமையான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.