அதிக விலைக்கு அரிசி விற்றவர் சிக்கினார் – இரண்டு இலட்சம் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சம்பா அரிசியை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட கொழும்பு 11இல் உள்ள ஒரு வர்தகருக்கு, மாளிககந்த நீதவான் நீதிமன்றம் ரூ. 200,000 அபராதம் விதித்துள்ளது.

கொழும்பில் 5ம் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு கடையில், நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை (CAA) நேற்று (28.04) நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் ஒரு கிலோ ரூ. 240 என விலை நிர்ணயிக்கப்பட்ட 5 கிலோ சம்பா அரிசிப் பொதியை, ஒரு கிலோ ரூ. 285 வசூலித்து, ரூ. 1,425க்கு குறித்த வர்த்தகர் விற்றதை நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை உறுதி செய்தது.

அந்த வணிகர் இதற்கு முன்னர் இரண்டு முறை இதேபோன்ற குற்றங்களைச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதவான் ரூ. 200,000 அபராதம் விதித்ததுடன், மேலும் மீறல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

Social Share

Leave a Reply