இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழு உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழு உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நியமனம் பெற்றனர்

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “கிரிக்கெட் மாற்றக் குழுவின்” (Cricket Transformation Committee) உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04.05) முற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழு உறுப்பினர்களாக பெயரிடப்பட்ட பின்வரும் உறுப்பினர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்:

திரு. சிதத் வெத்தமுனி

திரு. துஷிர ரதல்ல

திரு. பிரகாஷ் ஷாப்டர்

செல்வி. அவந்தி கொலம்பகே

இக்குழுவிற்காக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரோஷான் மகாநாம மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தற்போது தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமையினால், அவர்கள் நாடு திரும்பியவுடன் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறைச் சட்டத்தின் கீழ் (திருத்தப்பட்டவாறு) அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இக்குழு செயற்படும் என்பதுடன், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக மற்றும் செயல்பாட்டு விடயங்கள் தொடர்பில் முக்கிய பரிந்துரைகளை முன்வைப்பது இக்குழுவின் பிரதான பொறுப்பாகும்.

Social Share

Leave a Reply