தமிழில் அழைப்பாணை இல்லை. வர முடியாது – மனோ MP

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு வருமாறு சிங்கள மொழியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில் அதனை அவர் நிராகரித்ததுள்ளார். அத்தோடு விசாரணைக்கு வர முடியாதென அந்த ஆணைக்குழுவுக்கு அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரமே விசாரணைக்கு வர முடியுமென, தமிழ் மொழியில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு மனோ கணேசன் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பீக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும், குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை.

இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால், விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன்.
அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள், இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும், நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள், இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில், என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி, அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும், நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். அப்புறம் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன்.
ஆனால், அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும்.”

தமிழில் அழைப்பாணை இல்லை. வர முடியாது - மனோ MP

Social Share

Leave a Reply