புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச தயார் – ஜனாதிபதி

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களோடு இலங்கை பிரச்சினை தொடர்பில் தான் பேசுவதற்கு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு வட மாகாணத்தில் முதலீடுகளை செய்ய அழைப்பும் விடுத்துள்ளார். நேற்றைய தினம் அமெரிக்க அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளரிடம் இந்த கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) நேற்று (23.03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி, திருமதி நூலண்ட் அவர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பசுமைத் தொழிநுட்பத்தை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தவும், சைபர் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ள திருமதி நூலண்ட், தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் மூலம், உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளார்.

கொவிட் தொற்றுநோய் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளினால், இந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைத் தணிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல தீர்மானித்ததாக ஜனாதிபதி கூறியமைக்கு அந்த தீர்மானம் தொடர்பாகவும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் திருத்தத்திற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் திருமதி நூலண்ட் பாராட்டியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களின் மூலம், மின் உற்பத்திக்கான சாத்தியங்களை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்ட தூதுக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் உதவிச் செயலாளர் டொன் லூ (Don Lu), அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung), தலைமை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி, (Amanda Dory), அரசியல் அதிகாரி ஜெஃப் செனின், (Geoff Chanin), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச தயார் - ஜனாதிபதி

Social Share

Leave a Reply