பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்றால் தண்டிக்கப்படுவீர்கள் – சஜித்

.நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (28.06) நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுக்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்படும் சகல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துளளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முழுமையான செயல்பாட்டின் ஊடாக 100% மண்ணெண்ணெய் தேவையையும்,சுமார் 50% விமானங்களுக்கான எரிபொருள் தேவையையும், 100% நெக்டா தேவையையும், 30% டீசல், 14% பெட்ரோல், 8% எரிவாயு,மின் உற்பத்திக்குத் தேவையான பதப்படுத்தல் எரிபொருள் 75-100% வரையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய பெறுமதி மிக்க வளமாகும் எனவும்,இந்நாட்டிலுள்ள தூரநோக்கற்ற,வினைதிறனற்ற அரச நிர்வாகத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக இந்த தேசிய வளத்தை திருட்டுத்தனமாக ஏலம் விடுவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிறுவனங்களை ஏலம் போட முயற்சி நடந்தால்,அதற்கெதிராக கட்சி பேதங்களின்றி ஒரே நிலைப்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறே,இந்த அரச வளத்தைப் பாதுகாக்க முன்வந்த பெற்றோலிய தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பு, பொது ஊழியர் சங்கம், நிறைவேற்று அதிகாரிகள் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், பெற்றோலிய கைத்தொழில் ஊழியர் சங்கம், பொறியியலாளர்கள் சங்கம், சுத்திகரிப்பு கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலவரம் தொடர்பிலும், இதிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்றால் தண்டிக்கப்படுவீர்கள் - சஜித்

Social Share

Leave a Reply