திலீபனின் நினைவில் அரசியல் செய்வது அநாகரிகம் – ஜனநாயக போராளிகள்

நேற்று(27.09) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினாலேயே இந்த குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இவ்வாறான நிலையில் “நினைவேந்தல் நடைபெற்ற இடத்தில நடைபெற்ற நிகழ்வுகள் ஏற்புடையதல்ல எனவும், அநாகரீகமான செயற்பாடுகள்” எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் துளசி கருத்து வெளியிட்டுள்ளார்.

திலீபனின் நினைவேந்தலை வைத்து அரசியல் செய்ய முனைவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என கருத்து வெளியிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் போராளிகள் பலர் முன்னின்று செய்து வந்த இந்த நிகழ்வினை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமக்கான களமாக மாற்ற முயற்சிப்பதனையும், நினைவேந்தலின் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்யும் செற்பாடு எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“மஞ்சள் நிற சீருடை போன்ற உடடையணிந்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்தில அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர்கள் காணப்பட்டதாகவும், அஞ்சலி செலுத்த வருகை தந்த எவரையும் அவர்கள் மதிக்கவில்லை எனவும், மதிக்கப்படவேண்டியவர்களை கூட அவர்கள் அவ மரியாதை நடத்தியதாகவும் கூறிய துளசி, அந்த கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவற்றை வேடிக்கை பார்த்துகொண்டு நின்றதாகவும் மேலும் கூறியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , ஏனைய கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் என ஏற்கனவே எமது செய்தியாளர் சம்பவ இடத்திலிருந்தவர்களின் கருத்தை மையமாக வைத்து செய்தியினை வழங்கியிருந்தார்.

அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர் நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.

தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளிலும் சிறு சிறு சச்சரவில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில் பல முன்னாள் போராளிகள் பலர் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்ததாகவும் துளசி மேலும் கூறியிருந்தார். அவர்கள் பல காலமாக தொடர்ச்சியாக வருகை தருபவர்கள் எனவும் மேலும் அவர் கூறியிருந்தார்.

தியாக தீபத்தின் நினைவிடத்தை நேற்று காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் நினைவிடத்துக்கு சென்றவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முன்னாள் போராளிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் இழுபறிகளை தொடர்ந்து, தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போதும், தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதடி பகுதியில் இருந்து முன்னால் போராளிகள் இருவர் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர். அவ்வாறு செயற்பாட்டால் முன்னாள் போராளிகள் முன்னிலை பெறுவார் என்ற காழ்புணர்ச்சியினாலேயே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர் தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள். இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுக்குழுவினினை முன்னின்று நடாத்தியவர்வ வேலன் சுவாமிகள்.

காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.

காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.

அவரை அங்கிருந்தவர்கள் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Social Share

Leave a Reply