சீனாவுக்கு இலங்கையின் அதி உயர் மட்ட குழுவொன்று விரைவில் பயணிப்ப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இனை அமெரிக்க நியூயோர்க்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 77ஆவது மாநாட்டின் போதே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கான விஜயம் இடம்பெறவுள்ளது என்பதனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உறுதி செய்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மட்ட குழுவா அல்லது அமைச்சு மட்ட குழுவா என்பதனை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த பயணம் அடுத்த மாதம் நவம்பரில் இடம்பெறலாமென அலி சப்ரி மேலும் கூறியுள்ளார். கொரோனா இறுக்கங்கள் இலகுபடுத்தப்படும் வேளையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் கடன் மீள் செலுத்துகை தொடர்பிலும், மீள் ஒழுங்கமைப்பு புதிய கடன்கள் தொடர்பிலும் இந்த பயணத்தின் போது பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான அலுவலக மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.