மலட்டு கொத்து, மலட்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் ஷாபி சம்பவம் போன்ற சம்பவங்கள் மூலம் இனங்களுக்கிடையே வெறுப்பு ஏற்பட்டதாகவும், இதனால் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மொட்டுக்கட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக இனவாதத்தை விதைத்தது எவ்வாறு என்பதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், தான் இனவாதம், மதவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு முற்றிலும் எதிரானவர் எனவும், சந்தர்ப்பவாத இனவாத அரசியலால் நாடு பல்வேறு காலகட்டங்களில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நாட்டில் சிறுபான்மையினர் எனவொன்று இல்லை எனவும், சக தேசிய இனத்தவர்கள் உள்ளார்கள் என்பதே தனதும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் 12 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(09.10) இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
யார் எவ்வாறு அர்த்தம் கற்பித்தாலும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்றுள்ளது போல் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும்,அது குறையவோ அல்லது அதிகரிக்கப்படவே கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனவாதம் மற்றும் இனபேதங்கள் காரணமாக நாடு ஆபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டுக்கு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளதாகவும், கொரோனா மரணங்கள் அடக்கம் செய்த சம்பவம் போன்றன இதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எந்த இனத்தையும், மதத்தையும் சேர்ந்தவர்களை இழிவாகப் பார்க்கக் கூடாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எந்தவொரு நபரும் மற்றொரு நபருக்கு அடிபணிய விரும்பாததால், அந்த உரிமைகளுக்காக முன்நிற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு என்பதை இராணுவ பாதுகாப்பு மட்டுமே என அர்த்தம் கொண்டதாகவும், ஆனால் உண்மையில் தேசிய பாதுகாப்பு என்பது கல்வி, சுகாதாரம், இராணுவம், வர்த்தகம், தொழில்துறை போன்ற சகலதும் தான் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி என்ற வகையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரிவினைவாத ரீதியாக நாட்டைப் பிரிக்கும் மற்றும் பல்வேறு இனப்பிரிவுகளுக்கு வெவ்வேறு பிரிவுகளாக வலயங்களை பிரிக்கும் நிலைப்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சியாகவும் தான் இல்லை எனவும், தனது சொற்களஞ்சியத்தில் சிறுபான்மை என்ற எதுவும் இல்லை எனவும், சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுவதை விட, அவர்களை சக இனம் என்று மரியாதையுடன் அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி நிலமோ, அந்தஸ்தோ அல்லது நிலைப்பாடுகளோ இல்லாமல் அவர்கள் அனைவரும் இலங்கையர்களாக, ஒரு தேசமாக சம அந்தஸ்த்தில் அறியப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.