வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா அவர்களது உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் உதாசீனம் செய்த சம்பவம் ஒன்று இன்று (03.05) மாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.05) இடம்பெற்றது. குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் 4.30 இற்கு ஊடக சந்திப்பு நடைபெறும் என மேலதிக மாவட்ட அரச அதிபர் தி.திரேஸ்குமாரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மண்டப வாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடை நடுவில் வெளியேறிய வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவிடம், ஊடக சுதந்திர நாளான இன்று எம்மை ஏன் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
“நீங்கள் கூட்ட மண்டபத்திற்குள் வரவில்லையா. உங்களை அனுமதிக்கவில்லையென எனக்கு தெரியாது. மன்னித்துக் கொள்ளுங்கள். யார் வர வேண்டாம் என கூறியது என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் மண்டபத்திநற்கு செல்லுங்கள். நான் சொன்னதாக அரச அதிபரிடம் சொல்லுங்கள் எனக் கூறி அங்கு நின்ற இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் பிரதிநிதிகளிடம் அரச அதிபரிடம் தெரியப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.
இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் குறித்த விடயத்தை அரச அதிபரிடம் தெரியப்படுத்தியும், ஆளுனரின் உத்தரவை கருத்தில் எடுக்காது கதவுகளை மூடி ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களைக் கண்டதும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இருந்து பின் கதவால் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வெளியேறிச் சென்றுள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கூட்டம் முடிந்து வந்த வடக்கு ஆளுனர், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோரிடம் தம்மை கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்காமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
இதனை அவதானித்த கிராமிய இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் தம்மை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, கூட்ட மண்டபத்தின் பின் வாசல் பகுதிக்கு தனது வாகனத்தை வரவழைத்து அங்கிருந்து ஊடகவியலாளர்களை சந்திக்காது இராஜாங்க அமைச்சர் தனது சகாக்களுடன் வெளியேறியிருந்தார்.
ஊடக சுதந்திர நாளில் வவுனியா ஊடகவியலாளர்களது உரிமையும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் இந்த சம்பவங்கள் தொடர்பில் அக்கறை கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறு செயற்படாமல் ஊடகவியலாளர்கள் செய்திகளை திரட்ட உரிய இடம் வழங்கப்படவேண்டும்.