இலங்கையில் முதன்முறையாக திருநங்கைகள் மத்தியில் எச்.ஐ.வி நோய் தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திருநங்கைகள் மத்தியில் 9 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 165 எச்.ஐ.வி தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 25-24 வயதுக்கிடைப்பட்ட 22 ஆண்கள் உள்ளடங்குவதுடன், ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன, அதிகமான தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், 2021 ஐ விட 2022 இல் 43 வீதம் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கையில், குழந்தைகளுக்கு சரியான முறையில் பாலியல் கல்வி வழங்கப்படாமல் இருப்பதற்கும் இதற்கான காரணம் எனத் தெரிவித்த அவர், குழந்தைகளுக்கு சரியான பாலியல் கல்வியை வழங்குவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
எனவே, குறைவான அபாயகரமான பாலியல் நடத்தைகளைத் தேர்ந்தெடுக்கவும், எச்.ஐ.வி-யைத் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.