களுபோவில வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் மரணம்

களுபோவில போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக்குழந்தைகளது இறப்பு தொடர்பில் குழந்தைகளது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மருத்துவ அசண்டையீனம் காரணமாக இந்த இறப்பு இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட தம்பதியினருக்கு இம்மாதம் 23 ஆம் திகதி மகப்பேற்றுக்கான திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 08 ஆம் திகதி கர்பிணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

போதிய நிறையின்மையினால் குழந்தைகள் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஆண் குழந்தை இறந்துள்ளது. ஆரம்பத்தில் குறை நிறை சிக்கல்கள் காரணமாக குழந்தை இறந்துள்ளதாக தெரிவித்த போதும், பின்னர் சுவாச சிக்கல்கள் காரணமாக குழந்தை இறந்துள்ளதாக இறப்புக்கான காரணம் மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் 23 ஆம் திகதி காலையில் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகள் மூலம் தமக்கு நீதி கிடைக்கவேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக வைத்தியசாலைகளில் குழந்தைகளின் இறப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அத்தோடு வைத்தியசாலைகளின் கவனயீனம் காரணமாக சாதரண இறப்புகள் அதிகரித்துள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுகாதர சிக்கல்கள் இலங்கையில் நிலவி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகவே இருக்கின்றது. தொடரும் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவாறு அமைந்து வருகின்றன. அரசாங்கம் விரைந்து இதற்கான நடவடிக்கையையே எடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது.

Social Share

Leave a Reply