அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து இருந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த 4 முறைப்பாடுகளின் அடிப்படையில், தெஹிவளை, கல்கிஸ்ஸை உட்பட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணைகளின்போது குறித்த சந்தேகநபர் பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற பணத்தை, மனைவியின் கணக்கில் வரவு வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது.