ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் 50 வீதத்திலிருந்து 100 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, குறித்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனியார் அல்லது அரை அரசு வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெறுவதற்காக நகரத்திற்கு வருவதைக் குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் ஜனாதிபதி நிதியத்தில் இலகுவாகப் பதிவு செய்யும் முறையும் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கராபிட்டிய வைத்தியசாலையில் வேலை நேரத்தின் பின்னர் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இந்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ராகம வைத்தியசாலையில் சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா வரையான மருத்துவ உதவி தொகை வழங்கப்படுவதுடன் தனியார் அல்லது அரை அரசு வைத்திசாலைகளில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு இது வரை மருத்துவ உதவி வழங்கப்படாததோடு அதற்கான மருத்துவ உதவி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகள் தவிர, அரசு மருத்துவமனைகளும் இந்த ஆண்டு முதல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் வெளியில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.