நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் டெங்கு நோய் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ள இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது டெங்கு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டில் 88,398 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 58 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 71 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.