பாரிய கனியமண் அகழ்வுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில்; இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவதனை தடுத்து நிறுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மண்ணகழ்வை மேற்கொள்வதால் கடல் நீர் நன்னீருடன் கலந்து மன்னார் தீவு அழிந்து போகும் ஒரு நிலை காணப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரின் சுற்று சூழலை அழிக்கும் திட்டத்தை கைவிட்டு மக்கள் நலமாக வாழ நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
‘கனியவள மண் அகழ்வு மன்னார் மக்களின் வாழ்வாரத்தை அழித்து விடும்’’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்,மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இணைந்து மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள்,இஸ்லாமிய, இந்துமதத் தலைவர்கள், தெற்கிலிருந்து சிங்கள பிரமுகர்கள் இளைஞர், யுவதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சென்ற போராட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு மகஜர் ஒன்றையும் மன்னார் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
வலையொளி இணைப்பு…