ஐ.நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம் 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட  இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க இடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலத்தில் நேற்று(13.06) நடைபெற்றது. 

இதன்போது, மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஐந்தாண்டு செயற்திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பல்வகைமை தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உயிர் பலவகையை பாதுகாத்தல் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மையப்படுத்தியும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

சூற்றுச் சூழல் அபிவிருத்தி செய்தல், உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பருப பெயர்ச்சி காலங்களில்  வெள்ளம் ஏற்படுத்தல், விவசாய செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேவையான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கரையோர பிரதேசத்தில்  விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் போது உவர் நீர் உள்நுழைவதை தடுப்பதற்கான உவர் நீர் தடுப்பணை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சூழழியல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர் மற்றும் விசேட தேவைக்குரியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  

இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட நிபுணர் மல்கம் ஜென்சன், திட்ட நிபுணர் கே.பிரத பார்த்திபன், செங்கலடி பிரதேச செயலாளர் தவபாலன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், மத்திய சுற்றாடல் அதிகாரி ஸ்ரீவித்தியன், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply