யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுவதைப் போல, ஏதேனுமொரு அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருக்குமாயின், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் அளவிற்கு ஒரு அரசியல் கட்சியிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது சரியாக தெரியவில்லை என சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, அவ்வாறு ஒரு கட்சி ஆயுதங்களை வழங்கியிருப்பின் அவர்களின் கொள்கைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.