தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவித்த சேனாதிராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பதிலளித்துள்ளார்.

எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானமே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சத்தியலிங்கம்

“தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா கலந்துக் கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். மாவை சேனாதிராசா சுகவீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. சஜித் பிரேமதாசவுக்கு அதரவு வழங்குவது மத்திய குழுவின் தீர்மானம். அதனையே அறிவித்தோம்‌.

இது தொடர்பாக மூத்த துணைத்தலைலவர் நேரில் சந்தித்து மாவை சேனாதிராசாவுன் கலந்துரையாடுவார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply