திருத்தப்பணிகளை தொடர்ந்து நெடுந்தாரகை பயணிகள் படகு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்
உத்தியோகபூர்வமாக இன்று (19.09) கையளிக்கப்பட்டது.
சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகின் திருத்தப்பணிகளுக்காக 52 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
தமது தீவில் நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமைக்கு, ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும்,துறைசார் அமைச்சுக்கும் இதன்போது ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
இன்று முதல் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவிலிருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க உள்ளது.
நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும்.