ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வினை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தபால் அட்டைகள் அனுப்பிவைக்கும் நிகழ்வு மன்னார் பேருந்து நிலையத்தில் இன்று(27.09) நடைபெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MESEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், பெருமளவிலான மக்கள்,மதத் தலைவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி மக்கள் தொடர்ச்சியாகத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த போதும், அதனை நிறுத்துவதற்குக் கடந்த கால அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு குறித்த திட்டத்தினால் ஏற்படும் பாதகமான விளைவினைத் தெரியப்படுத்தும் நோக்கில் மக்களின் கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரங்களின் போது, தான் ஜனாதிபதியாக வந்தால் மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரம் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply