ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று(03.10) இந்த போட்டி நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை மகளிரின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் சார்பில் அணித் தலைவி பாத்திமா சனா 30(20) ஓட்டங்களையும், நிடா தர் 23(22) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இலங்கை சார்பில் பந்து வீச்சில் உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, சமரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கவிஷா தில்ஹாரி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

117 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் விஷ்மி குணரத்ன 20(34) ஓட்டங்களையும், நிலக்‌ஷி டி சில்வா 22(25) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் பத்துக்குக் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் சாடியா இக்பால் 3 விக்கெட்டுக்களையும், பாத்திமா சனா, ஒமைமா சோஹைல், நஷ்ரா சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 31 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாகப் பாகிஸ்தான் அணித் தலைவி பாத்திமா சனா தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply