பாகிஸ்தானில், இலங்கையரான பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஈடுபாட்டை கொடூர கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
“குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள இம்ரான் கான், இச்செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும், பாக்கிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தொடர்ந்தும் தொழில் புரிந்து வரும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கோரியுள்ளார்.
