
அருகம்பை சுற்றுலா தலத்தின் மீதும் பயணிகள் மீதும் தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருந்த சம்பவத்தின் பின்ணணியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் சம்மந்தம் இருப்பதாகவும், சிறையிலிருந்து இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடைப் பிரிவு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக அததெரென ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, கொழும்பு மேலதிக நீதவான் மன்றத்தில் கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது பயங்கரவாத தடைப் பிரிவு இந்த தகவலை நீதிபதிக்கு தெரிவித்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன, W.A. டொன் அமரஸ்ரீ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை 90 நாட்கள் விசாரித்த விசாரணை அதிகாரிகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டு நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளனர். அத்தோடு இந்த சம்பவத்தின் முதல் சந்தேக நபரான பிலால் அஹமட், 2008 ஆம் ஆண்டு கெஸ்பாவ குண்டு தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளியான, சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ள ஆனந்தன் சுகாதரன் என்பவருடன் தொடர்பு கொண்டுள்ளமையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய திகதிளில் வீடியோ படம்பிடிக்கவும், புகைப்படம் எடுக்கவும் பல நபர்களை அருகம்பே விரிகுடா சுற்றுலாப் பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரஜிந்த கண்டேகெதர, சில ஆவணங்களில் பிலால் அகமதுவின் கையொப்பத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது காவல்துறை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதவான், விசாரணைக்காக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றம் அவர்களை கண்காணித்து வருவதாகவும், கண்காணிப்புக்காக அவர்களைச் சந்தித்தபோது, சந்தேக நபர்கள் யாரும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தன்னிடம் புகார் அளிக்கவில்லை என அதற்கு பதிலளித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான், சட்டமா அதிபரிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.