மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் நேற்றைய தினம் (2.02.) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்களாக பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படை, யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்