இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 12,000க்கும் அதிகமான இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (10.03) பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த மின்தடை ஏற்பட்டதுடன், பல முக்கிய நகரங்கள் தற்காலிகமாக இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இலங்கை மின்சார சபையை கலைத்து அதை 6 தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்த அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், கடந்த 8ஆம் திகதி நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபையின் பழைய கட்டமைப்பு நிறைவடைந்ததுடன், 9ஆம் திகதி முதல் அதன் சேவைகள் 6 தனித்தனி நிறுவனங்களின் கீழ் செயல்படத் தொடங்கியுள்ளன.