கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும் தரப்பின் பிரதான கொறடாவுமான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (16/12) ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், கேஸ் நிறுவன தலைவர்களை தொலைபேசியூடாக கூட தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர்கள் மறைந்திருக்க வேண்டிய தேவை கிடையாது.
அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்தாமல் மக்களுக்கு பதில் வழங்க வேண்டும். அத்தோடு இந்த கேஸ் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.ஒரு கம்பனி தலைவர் ஊழல் மோசடி பற்றி பேசுவதை கண்டேன். ஆனால் கேஸ் பிரச்சினை வரும் போது தலைமறைவாகிறார்.
மறைந்திருப்பதற்காக ஜனாதிபதி அவருக்கு பதவி வழங்கவில்லை. பிரச்சினைகள் இல்லாத போது கருத்துக் கூறுவதை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்காமல் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும்” என்றார்.
