மனோ எம்.பி – அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, நேற்று (16/12) அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெற்றுவரும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடுகள், தேசிய அரங்கில் மலையக தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புகூறல், எதிர்வரும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன..

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரசாங்க பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வரவுள்ளதாகவும், அவர்கள் த.மு.கூ உட்பட இலங்கையின் அனைத்து தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்க தூதர் இதன்போது தெரிவித்தார். அதேபோல் அமெரிக்காவிற்கு வருகைதந்து, இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும்படியும் மனோ கணேசன் எம்.பிக்கு அமெரிக்க தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தற்போதைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டின் பின்னர், தேசிய, சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்கவுள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பொது குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என மனோ எம்.பி பதிலளித்தார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்பியுடன், த.மு.கூ நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்.பி வேலு குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், இணை தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மனோ எம்.பி - அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

Social Share

Leave a Reply