அம்பாறை – புத்தங்கல ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (29/12) நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள, அகில இலங்கை பௌத்த மஹா சம்மேளன மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும், தேரரின் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
பிரபல தம்ம போதகரான சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரர், தனது 78ஆவது வயதில் நேற்று முன்தினம் (28/12) காலமானார்.
இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிநிலை வகித்த அவர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரராவார்.
2007 மே மாதத்தில் புத்தங்கல ஆனந்த என்ற பெயரில் துறவறத்தை ஏற்ற தேரர், பல தம்ம புத்தகங்களை எழுதியுள்ளதோடு பல மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.