இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பெரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணை நேற்று மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கடந்த 31.05.2022 அன்று நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பெரல்கள் இனம் காணப்பட்டுள்ளன.
இன்னிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் நீதிமன்றில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டமைக்கு அமைய 20.06.2022 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலீஸ் அதிகாரிகள்,படைஅதிகாரிகள்,கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன அதில் எரிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ள நிலையில் அவை மண்ணெண்ணை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு 7 பெரல்களிலும் 715 லீற்றர் மண்ணெண்ணைய் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கந்தசாமி என்பவரின் காணியில் இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
