தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(21.09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளார்.
“கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தலை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும்
அவர் இனத்தின் அடையாளம், அவர் மக்களுக்கு சொந்தமானவர். ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்” எனவும் கூறியுள்ளார்.
நினைவேந்தலுக்கான இடம் மாநகர சபை எல்லைக்குள் காணப்படுவதனால் அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
“நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்த யாழ் முதல்வர்,
“சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விட மாட்டார்கள். குழப்புவார்கள். ஆகவே இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது” எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் உள்ள அரசு வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசு குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.