இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கான கடன் வசதிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் இதுவரை வெற்றியளித்துள்ளதாகவும், கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இந்தியா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், சீனாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சீனாவின் எக்ஸிம் வங்கியும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு அடுத்த சில நாட்களில் சீனாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு கடனுதவி வழங்கிய இரண்டு பிரதான நாடுகளாகும், அவர்களின் உடன்படிக்கை கிடைத்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் வசதி தொடர்பில் உடன்பாட்டை வெளிப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

