நேற்றிரவு (03 .02) மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மதியம் முதல் எல்பின்ஸ்டோன் திரையரங்கம் முன்பு போராட்டக்காரர்கள் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணி ஒருவருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது.
இந்நிலை தொடர்ந்ததால் பொலிசார் அவர்களை கலைக்க இரவு 9:00 மணியளவில் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகித்து வெளியேற்ற முயற்சித்தனர்.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்ளுப்பிட்டி, கொம்பனி தெரு மற்றும் கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
