இலங்கையின் அமைவியத்திற்கு அமைய, கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தல மற்றும் பல்வத்தையை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மிகவும் குறைவான அழுத்தம் கொண்டவை, எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உள்ள இந்தோ – அவுஸ்திரேலிய நிலப்பரப்பு பகுதி சிறிது காலமாக பிரிந்து வருவதாகவும், அதன் விளைவுகளே கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் புத்தல மற்றும் பல்வத்தையை அண்டிய பகுதிகளில் உணரப்பட்ட சிறிய நில அதிர்வுகள் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தோ -ஆஸ்திரேலிய டெக்டோனிக் தகடு இலங்கையில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும், அது பிரிவதன் காரணமாக, நாட்டில் சில சிறிய அதிர்ச்சிகளை உணரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இது இந்தோ -ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் என்று அழைக்கப்பட்டாலும், புவியியலாளர்கள் இப்போது அதை இந்தோ டெக்டோனிக் பிளேட் மற்றும் ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் என்று பிரித்து அழைக்கிறார்கள், இதற்குக் காரணம் இந்த தட்டுகள் இப்போது தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதே என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
புத்தல மற்றும் பல்வத்த பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 10ம் மற்றும் 11ம் திகதிகளில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 3 என்ற அளவிலான இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும் என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
வெல்லவாய, புத்தல போன்ற பிரதேசங்களில் இதற்கு முன்னர் சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையின் அமைவிடத்திற்கமைய பாரிய நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
