ஆசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த மே மாதம் இந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கொண்டு வந்தோம் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(30.03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“ஆளும் தரப்பாக இல்லாததால்,தனி நபர் பிரேரனையாக தாக்கல் செய்தேன். நாங்கள் கொண்டு வந்த சட்டமூலத்தில் தொழிற்சங்கங்களை நசுக்கும் விதமாகவோ அல்லது இளைஞர்களை கைது செய்யவோ அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை சீர்குலைக்கும் வகையிலோ அமைந்திருக்க வில்லை” என அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
“திருடர்களைப் பிடிப்பதே இந்த சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் நோக்கமாக இருந்தால் ஏலவே அரச கட்டமைப்பில் போதுமான நிறுவனங்கள் உள்ளன. சிஐடி, எப்சிஐடி போன்ற நிறுவனங்களில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றம் சென்ற ஏராளமான வழக்குகள் உள்ளன. ஊழல் அதிகம் இருந்ததால்தான் இந்நாடு இந்த வங்குரோத்து நிலைக்கு வந்தது என்பதை நாம் அறிவோம்.
நல்லாட்சிக்காலத்தில் இது தொடர்பில் CID மற்றும் FCID விசாரணைகளை நடத்தி நூற்று முப்பது பேருக்கு எதிராக தேவையான அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தது.
அது மாத்திரமன்றி முப்பது வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் தாக்கல் செய்யப்பட்டன. சமீபகாலமாக, தொழில்நுட்ப காரணங்களால் பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. ஜனாதிபதிக்கு உண்மையான தேவை இருந்தால் இதை முன்னோக்கி கொண்டு செல்லவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என ரஞ்சித் மத்தும பண்டாரா அறிவுரை வழங்கியுள்ளார்.
“இந்த விசாரணைகளில் இருந்து முன்னர் அடையாளம் கணாப்பட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். இன்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான வழக்குகள் குவிந்து கிடக்கிறன. திருடர்களுடன் இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவால் இதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும். இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றினாலும் இந்த அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் மேலும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மூலத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தியாக பூரண ஆதரவு வழங்குவோம் என்று கூறுகிறோம். தொழில்நுட்ப கோளாருகள் காரணமாக வாபஸ் பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும். சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரங்களின் பிரகாரம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து முன்னைடுத்துச் செல்லுமாறு கோரிக்கை முன்வைத்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கீழ்வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திலோ, உலக வங்கியிலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ ஊழல் இருக்கும் நாட்டை மீட்க முடியாது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகிறோம்.
மேலும் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து அங்கும் இங்கும் தாவுவதாக பேசப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் அமையும் போது அரசாங்கத்தில் 157 எம்பிக்களும் ஜனாதிபதி தேர்தலின் போது 135 எம்பிக்களும், கடந்த வரவுசெலவுத் திட்டத்தின் போது இது 123 ஆக குறைந்துள்ளது என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம். அதாவது இந்த அரசாங்கத்தில் இருந்து 34 பேர் எதிர்க்கட்சியில் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளைப் பெற்றவர்கள் அரசாங்கத்தில் ஒரு சிலர் இருக்கிறார்கள், ஆனால் முன்பு போன ஐந்தாறு பேர் திரும்பி வந்துள்ளனர்.
இன்று அரசாங்கத்தின் பக்கமே பிரச்சினையாக இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் அல்ல என்பதை தெளிவாக கூறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பணத்துக்கு விலைபோக மாட்டார்கள். இருநூறு மில்லியன் வரை சலுகை வழங்கப்பட்டு விலைபேசப்படுவதாக அறியக் கிடைக்கிறது. எமது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் யாரும் பணத்தின் செல்வாக்கிற்கு ஆளாக மாட்டார்கள் என்பதை தாம் உறுதியாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
