எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா(Kenichi Yokoyama) உள்ளிட்ட குழுவினர் இன்று(09.06) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தற்போது முகம்கொடுத்து வரும் நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிட தூதுக்குழுப் பணிப்பாளர்களான சென் சென் (Chen Chen),தகாபுமி கடோணே(Takafumi kadono) ஆகிய பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

வீழ்ச்சி கண்டுள்ள துறைகள் குறித்து தனித் தனியாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு கால அவகாசம் தேவை என்றும், முறையான நிதி முகாமைத்துவம் சார்ந்து அரசாங்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்தினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி பல்வேறு துறைகளை இலக்காகக் கொண்டு இலங்கைக்கு ஒத்துழைப்பை நல்க எதிர்பார்பதாகவும் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply