அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்; டக்ளஸ்!

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடல் பாதை பழுதடைந்து இருப்பதனால், அதனை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அதேபோன்று, பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கிலே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தீவகங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டணங்களை மீளாய்வு செய்தல், குடிநீர் விநியோகத்தினை உறுதிப்படுத்த போன்ற விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், ஏனைய விடயங்களை மிக விரைவில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply