மத்திய மாகாணத்திலும் பரவும் தோல் கழலை நோய்!

மத்திய மாகாணத்திலும் கால்நடைகளிடையே தோல் கழலை நோய் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் குறித்த நோய் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பீ.இராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை மற்றும் கலேவெல பகுதிகள், நுவரெலியா மாவட்டத்தில் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ ஆகிய பிரதேசங்களிலும் கால்நடைகளிடையே இந்நோய் பரவி வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளதாக பிரதேச கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது ஒரு வைரஸ் நோய் தொற்று என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நோய் பதிவாகியுள்ள பகுதிகளிலிருந்து விலங்குகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளின் சருமத்தில் தோன்றும் கட்டிகளைக் கொண்டு இந்நோயினை அடையாளம் காண முடியும் எனவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகிலுள்ள கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறும் கால்நடை வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply