குருந்தூர்மலை விவகாரம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிசார் மீது மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், க. சிவநேசன், ஆதி ஐயனார் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன், ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பாண்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன் பொங்கல் செய்வதற்காக மூட்டப்பட தீ பொலிஸார் ஒருவரால் அணைக்கப்பட்டது.

அத்தோடு வழிபாடுகளை மேற்கொள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டனர்.

மேலும் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணனும் பொலிசாரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலை விவகாரம்  குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Social Share

Leave a Reply