மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினால் பழமரத் தோட்டங்கள் அமைக்கம் திட்டம் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதேச செயலக பிரிவில் பல மரநடுகை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் பழமரத் தோட்டம் அமைக்கும் நிகழ்வு நேற்று (22.08) அசீசி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது மா, தோடை, மாதுளை, கொய்யா என 80 பயன்தரு பழ மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மலராஜ், அருட்சகோதரர் ஜெகன், அருட்தந்தை அம்றோஸ், நன்னிலம் நிறுவனத்தின் உறுப்பினர் சிந்துஷா, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (திட்டமிடல்) மற்றும் சிறுவர் இல்ல மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை பிரதேச செயலக உத்தியோகத்தர்களான கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ப. ராஜதிலகன், விதாதா வெளிக்கள இணைப்பாளர் வ. பிரசாந்த் ஆகியோர் இணைந்து செயற்படுத்தியுள்ளனர்.
