அரசியல் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள ஐ.ம.ச கலந்துரையாடல்!

ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்காலத்தில் கட்டியெழுப்பவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கை மக்கள் கட்சித் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதோடு,எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் பரந்த அரசியல் கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அசங்க நவரத்ன, எதிர்காலத்தில் இந்த கலந்துரையாடல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு எடுத்த தீர்மானங்களின் பிரகாரம், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு பரந்த கூட்டணியில் இணையுமாறு இலங்கை மக்கள் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

Social Share

Leave a Reply