விஞ்ஞான பரிசோதனைகளின் தவறான முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கையிடம் 8 மில்லியன் டொலரை சீன உர நிறுவனமான கிங்டோ சீவின் பயோடெக் குழுமம் நஷ்ட ஈடாக கோரியுள்ளது.
விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவர பாதுகாப்பு சேவையிடம் இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹிப்போ ஸ்பிரீட் என்ற கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சேதன உரத்தில், அர்வீனியா எனப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியா உள்ளடங்கியிருப்பதாக, தேசிய தாவர தடுப்பு காப்பு சேவையினால் கூறப்பட்டிருந்த கருத்துகள் மிகவும் தவறானவை என்றும், இதனால் தாம் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளதாகவும் குறித்த சீன உர குழுமம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முன்னர் மேற்கொண்ட சேதன உரப் பரிசோதனைகளின் போது, உரிய முறையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ள கடிதம் கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களில் தமக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் குறித்த சீன நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
