மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையில் வவுணதீவு பிரதேசத்தின் சுமார் 700 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப கட்டமாக 37 பயனாளிகளுக்கு நேற்று (14.09) இவ்வுதவு தொகை வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.