மக்கள் ஆணை மூலமே மாற்றம் நிகழும் – சஜித்..!

சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்,ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவிகளை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 80 ஆவது கட்டமாக, கம்புறுபிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு எனும் பெயரில் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாதொழித்தமையினால்,சமூக ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு தகவல்களை வெளியிட மக்கள் அஞ்சுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மை தகவல்களை நாட்டுக்கு வெளியிட பயப்பட வேண்டாம் எனவும் உண்மையான தகவல்களை நாட்டுக்கு வெளிக்கொணர்வதன் மூலம்,அரசாங்கத்தின் மிலேச்சத்தனம் பிரயோகிக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் இடம்பெற்றால்,பாதிக்கப்படும் சகல மக்களுக்கும் இலவச சட்ட ஆதரவை வழங்கி ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

தனி நபரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்காது உண்மையைப் பேசுவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் இது ஹிட்லரினதோ, முசோலினியினதோ அல்லது ஸ்டாலினதோ நாடு அல்ல என தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பில் அமைந்த ஆட்சி முறையே இங்கு காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அழித்த தரப்பினரிடமிருந்து ஆட்சியைப் பெற்று ஹிட்லர்களாகவும், முசோலினியாகவும் மாற முயற்சித்தால் 7-8 மாதங்களில் மக்கள் நாட்டை மாற்றியமைப்பர் என்றும், மக்கள் ஆணையின் மூலமே இந்த மாற்றம் நிகழும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply