இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. 55.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்டது. இதில் ஷக் க்ரோவ்லி 76 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா சிறப்பாக பந்துவீசி 06 விக்கெட்ளை கைப்பற்றி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்ளை கைப்பற்றினார்.
தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடி வரும் இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. யஷாஸ்வி ஜய்ஷ்வால் 209 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரின் துடுப்பாட்டம் மூலமே இந்தியா அணி தப்பித்துள்ளது. ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அரைச்சதத்தை கூட தொடவில்லை. சுப்மன் கில் 34 ஓட்டங்களையும், ராஜாத் படித்தர் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன், சொஹைப் பஷீர், ரெஹான் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு அணிகளுக்குமான ஐந்து போட்டிகளடங்கிய தொடரில் முதற் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் காணப்படுகிறது.