நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 20 – 20 கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று (17ஃ11) நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்களும், 3ஆவது வீரராக களம் இறங்கிய சாப்மேன் 50 பந்தில் 63 ரன்களும் எடுத்தார்.

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் ஷர்மா உடன் சூர்யாகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். ரோகித் ஷர்மா 36 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சூர்யகுமார் 40 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கடைசி நான்கு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 17ஆவது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமார் யாதவை வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. டேரில் மிட்செல் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் வைட் மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசப்பட்ட பந்தில் வெங்கடேஷ் அய்யர் பவுண்டரி அடித்தார். இதனால் 5 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3ஆவது பந்தில் அக்சார் பட்டேல் ஒரு ரன் எடுத்தார். 4ஆவது பந்தை ரிஷாப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட, இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Social Share

Leave a Reply