இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள்
சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (15) தெரிவித்துள்ளார்.
அத்துடன் 105 பொறியியலாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறையில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் பணியிலிருந்து விலகுவதால் மின்சார சபை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் ஏராளமான பொறியாளர்கள் தங்களுடைய நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பல்வேறு
நாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மின்சார பொறியியலாளர்கள் வெளிநாடுகளில் 4000 டொலர்கள் சம்பளம் பெறுவதாகவும்,
அனுபவம் வாய்ந்த பொறியாளர் சில நாடுகளில் மாதம் 6,000 முதல் 8,000 டாலர்கள் வரை சம்பளம் பெறலாம் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள்
சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.